search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழக ஆட்சி"

    18 எம்.எல்.ஏ.வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார். #TTVDhinakaran
    வேலூர்:

    18 எம்.எல்.ஏ.வழக்கில் தீர்ப்பு வந்ததும் தமிழக ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும் என டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேசினார்.

    அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேலூர் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய மாவட்டத்தின் சார்பில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் பொதுக்கூட்டம் நேற்று வேலூரில் நடந்தது. கூட்டத்திற்கு வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் என்.ஜி.பார்த்திபன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாளில் நடக்கவேண்டிய இந்த கூட்டத்திற்கு தடைவிதித்ததால் இன்று நடக்கிறது. நம்மால் வளர்ந்த ஜாம்பவான் அமைச்சர் வீரமணி என்னென்ன சொத்துக்கள் சேர்த்துள்ளார் என்ற பட்டியலை அவருடன் இருப்பவர்களே என்னிடம் கொடுத்துள்ளார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கும் என்று 8 கோடி தமிழ் மக்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

    அந்த தீர்ப்பு வந்ததும் இந்த ஆட்சியின் ஆட்டம் அடங்கிவிடும். ஆட்சியாளர்கள் மாமியார் வீட்டுக்கு செல்லும் காலம் நெருங்கிவிட்டது. வேலூரில் ஆங்கிலேயருக்கு எதிராக 1806-ம் ஆண்டு சிப்பாய் புரட்சி ஏற்பட்டது. அதேபோன்று சுதந்திரம் பெற்றதும் செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் தேசிய கொடியும் குடியாத்தத்தில் இருந்துதான் நெய்யப்பட்டு அனுப்பப்பட்டது. முப்படைக்கும் வீரர்களை அனுப்பும் மாவட்டம் வேலூர். அதேபோன்று இந்த மாவட்டத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு மக்கள் உறுதுணையாக இருப்பார்கள்.

    தமிழகத்தில் நடைபெறும் துரோக ஆட்சியை அகற்ற, அதர்மத்தை முறியடிக்க 13 தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். அதேபோன்று திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளிலும் வெற்றிபெறுவோம். இரண்டாவது இடம் உதய சூரியனுக்கா, இரட்டை இலைக்கா என்பதுதான் போட்டி. இந்த தேர்தலில் ஆளுங்கட்சி எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் பலிக்காது. அவர்கள் பணம் கொடுத்தாலும் மக்கள் குக்கர் சின்னத்திற்குதான் வாக்களிப்பார்கள்.

    திருவாரூர் கருணாநிதி வெற்றிபெற்ற தொகுதியாக இருந்தாலும், எனக்கும் அதுதான் சொந்தஊர். முன்பு வேண்டுமானால் கருணாநிதி வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் தற்போது நமது மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் அரசியலில் பிரவேசிக்கவேண்டும் என்பதற்காகவும், துரோக ஆட்சியை அகற்றவும் நமக்கு மாபெரும் வெற்றியை தருவார்கள்.

    உண்மையான அ.தி.மு.க., அம்மா மக்கள் முன்னேற்ற கழகமாக பரிணாமம் பெற்றுள்ளது. இனி அ.தி.மு.க.வுக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என்று ஒரு அமைச்சர் பேட்டி கொடுத்திருக்கிறார். ஆனால் அ.தி.மு.க. என்பது போர்டும், கட்டிடமும்தான் உள்ளது. மக்கள் நம் பக்கம்தான் இருக்கிறார்கள். ஓரிரு மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். எம்.ஜி.ஆர். 1972-ல் புதிய கட்சி தொடங்கி திண்டுக்கல்லில் வெற்றிபெற்றார். தி.மு.க. 2-வது இடத்திற்கும், காங்கிரஸ் 3-வது இடத்திற்கும் தள்ளப்பட்டது. அதேபோன்று அம்மாவின் தொண்டர்கள் மீண்டும் சரித்திரம் படைப்பார்கள்.

    நான் உங்களால் உருவாக்கப்பட்ட தலைவன். அதனால்தான் ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றுபெற்றேன். இன்று ஆட்சியில் இருப்பவர்கள் சின்ன அம்மாவால் உருவாக்கப்பட்டவர்கள். அவர்கள் சின்ன அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டு மக்கள் விரோத நடவடிக்கை, மக்கள் விரும்பாத திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அம்மா தடைவிதித்த திட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கதவை திறந்துவிட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் கைகோர்த்து ஒரு ஆண்டு பெரிய சாதனை படைத்துவிட்டதாகவும், ராஜதந்திரம் என்றும் கூறுகிறார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு கோர்ட்டில் உள்ளதால் தான் இந்த ஆட்சி நீடிக்கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.  #TTVDhinakaran
    எடப்பாடி பழனிசாமி-கவர்னர் தலைமையில் தமிழகத்தில் இரட்டை ஆட்சி நடக்கிறது என்று திருச்சி திருமண விழாவில் மு.க.ஸ்டாலின் பேசினார். #mkstalin #tngovt #governorbanwarilalpurohit

    திருச்சி:

    மறைந்த தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் இல்ல திருமண விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடை பெற்றது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களான திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன்- வந்தனா திருமணத்தை நடத்தி வைத்தனர். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திருமண விழாக்களில் அரசியல் பேசுவதில் எந்த தவறும் இல்லை. ஏனென்றால் நாட்டில் உள்ள தற்போதைய நிலை அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் உள்ள ஆட்சி எப்போது அப்புறப்படுத்தப்படும் என தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்.

    ஏனென்றால் மாநில உரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும், மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு கவர்னர் தலைமையிலும் என இரட்டை ஆட்சி நடக்கிறது. இதனால் மாநில உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. மக்களை பற்றி இந்த அரசுக்கு எந்த கவலையும் இல்லை.

    காவிரி மீட்பு வெற்றி விளக்க பொதுக்கூட்டத்தை அ.தி.மு.க.வினர் நடத்தி வருகிறார்கள். அதில் முதல்வர், துணை முதல்வர் பற்றி அமைச்சர்கள் புகழ்ந்து பேசுகிறார்கள். ஆனால் காவிரி பிரச்சினையில் முழுமையான வெற்றி கிடைத்திருக்கிறதா? என்றால் இல்லை. கொஞ்சம் பெருமூச்சு விட்டு கொள்ளலாம், அவ்வளவு தான்.

    நேற்று கர்நாடக முதல்வர் குமாரசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பை அழிக்கும் வகையில் அவர்கள் உச்சநீதிமன்றத்திற்கு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அது பற்றி எங்களுக்கு கவலையில்லை என்கிறார். அவருக்கு இதில் மட்டும் கவலையில்லை. நீட் தேர்வு, ஸ்டெர்லைட், 8 வழிச்சாலை பாதிப்பு ஆகியவற்றை பற்றியும் கவலையில்லை. அவருக்கு கவலை எல்லாம் ஆட்சி தக்க வைப்பதில்தான் உள்ளது.

    மக்களை பற்றி கவலைப்படாத இந்த ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டுமென மக்கள் கூறுகிறார்கள். அதன்படி இந்த ஆட்சியை அகற்ற இது போன்ற திருமண விழாக்களில் பங்கேற்பவர்கள் உறுதியேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் வரவேற்று பேசினார். முன்னாள் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு வாழ்த்தி பேசினார். முன்னாள் அமைச்சர்களும் எம்.எல். ஏ.க்களுமான கே.என். நேரு, பொன்முடி மற்றும் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், எம்.எல்.ஏ.க்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சவுந்திரபாண்டியன், ஸ்டா லின்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.வீரபாண்டி ராஜா உள்பட பலர் கலந்து கொண் டனர். முடிவில் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பில் பெரியசாமி நன்றி கூறினார்.  #mkstalin #tngovt #governorbanwarilalpurohit

    ×